Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெருகி, ஆரோக்கியம் நிறைந்த, இனிமையான ஆண்டாய் அமைய இறைவன் அருளட்டும்.

புத்தாண்டு கடப்பாடு (resolution) எடுப்பது நம்மில் பலருக்கும் பிடித்த ஒன்று. இதுநாள் வரை அப்படி ஒன்றைத் தீவிரமாகச் செய்யாத நான், இம்முறை 'தினமும் யோகாசனமும், எளிய உடற்பயிற்சிகளும் செய்து உடல் நலனைப் பேணுவது' என்ற கடப்பாட்டை எடுத்துள்ளேன். இதை எவ்வளவு சரியாகச் செய்கிறேன் என்பதை ஒரு காலாண்டுக்குப் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். :-)  இந்தக் கடப்பாடுகளைப் புத்தாண்டு தொடங்கும் போது தான் எடுக்க வேண்டுமா? எப்படியோ ஒரு நல்ல முடிவை (decision) அல்லது தொடக்கத்தை (beginning) எடுக்க புத்தாண்டு உதவுமானால் மகிழ்ச்சியே.

நமக்காகச் செய்யும் நல்ல உறுதிமொழிகளைப் போல இந்த சமூகத்திற்காகவும் நம்மால் இயன்றதைச் செய்தால் அதன் நிறைவே தனி தான். அப்படி என்ன நம்மால் பெரிதாகச் செய்து விட முடியும்? என்று எண்ணவே வேண்டியது இல்லை. நம்முடைய செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு ஒரு சிறு நன்மை விளைந்தாலே போதும். உதாரணத்திற்கு, உலகம் வெப்ப மயமாதலை (global warming) தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும்? வீட்டில் மின்விளக்குகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்கலாமே? பலமுறை பல நண்பர்களின் இல்லங்களில் யாருமே இல்லாத அறைகளிலும் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறேன். அதைத் தவிர்த்தாலே போதுமே. :-)

நான்கு நண்பர்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த போது, நாம் படித்து வளர்ந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு ஏதாவது உபயோகமாகச் செய்தால் என்ன, அதன் மூலம் அடிப்படைத் தேவைகளுக்கே திணறிக் கொண்டிருக்கும் பள்ளிகள் பயனடையுமே என்று ஆலோசித்தார்கள். Team India என்றத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவானது. யார் அந்த நண்பர்கள்? தமிழகக் கிராமங்களில் படித்து அமெரிக்காவில் பணிபுரியும் கணினி வல்லுனர்கள் அவர்கள். சிறு புள்ளியாய்த் தொடங்கி இன்று மிகப் பெரிய அமைப்பாக மாறியுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதன் உறுப்பினர்களின் உதவியுடன் பல பள்ளிகள் பயனடைந்துள்ளன. www.indiateam.org இணையத் தளத்தில் எல்லா விபரங்களும் இருக்கின்றன. எவ்வளவு சிறந்த பணி இது?

என்னுடன் பணிபுரியும் என் நெருங்கிய நண்பர் தனது மகனின் பிறந்த நாளை சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடிய விதம் என்னை நெகிழ வைத்தது. சிங்கப்பூரில் மனவளர்ச்சி குறைந்த, வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கான பள்ளியைத் தேடிப் பிடித்து, அத்தியாவசியத் தேவை ஒன்றைப் பூர்த்தி செய்து கொள்ள வசதியில்லாத ஒரு குழந்தைக்கு அந்தத் தேவையைச் செய்து கொடுக்க முடிவு செய்தார். ஒரு குழந்தைக்கு பார்வைக் குறைபாடும் இருந்துள்ளது. அதைச் சொல்லக் கூட அந்தக் குழந்தைக்கு தெரியவில்லை. கண் பரிசோதனை செய்து, கண்ணாடியும் வாங்கிக் கொடுத்துள்ளார். கண்ணாடி அணிந்த அந்த நிமிடத்தில் குழந்தை அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியவில்லை என்றார். அங்குள்ள மற்ற குழந்தைகளுக்கும் சிறு பரிசுகள் கொடுத்தார். தன் மகனையும் உடன் அழைத்து சென்று வந்தார். அதற்கு அவர் கூறிய காரணமும் என்னைக் கவர்ந்தது. 'சமூகத்தில் இப்படியும் குழந்தைகள் இருக்கிறார்கள். பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்குவதை விட பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி என்பதை அவன் மனதில் இப்போதே விதைத்து விட வேண்டும்' என்று கூறினார்? இதை விடச் சிறந்த பிறந்த நாள் கொண்டாட்டம் வேறு எது இருக்க முடியும்? யார் அந்த நண்பர்? வெளியே சொன்னால் அவருக்கு பிடிக்காது. உதவிக் குறிப்பு ஒன்று தருகிறேன் - நீங்களே கண்டு பிடியுங்கள் :-) அவருக்கு இரண்டு மகன்கள்.

இந்தியாவில் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாகி விட்டது. எனது அண்ணன் கூடுமான வரை விபத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கு உதவுவார். தீபாவளியன்றும், அதற்கு அடுத்த நாளும் இரு விபத்தில் சிக்கியவர்களுக்கு அடிப்படை உதவிகளைச் செய்ததாகக் கூறினார். இரண்டாம் நாள் விபத்தில் சிக்கிய இரு வாலிபர்களிடம் கையில் இருந்த 1000 ரூபாயும் கொடுத்ததாகச் சொன்னார். 'ஒரு சட்டை குறைவாக எடுத்ததாக நினைத்துக் கொள்வோம்' என்றார். மகிழ்ச்சியாய் இருந்தது.

மிகப் பெரிய சமூக மாற்றங்களை செய்ய இயலாவிடினும் பரவாயில்லை. மேலே சொன்ன உதாரணங்கள் போல நம்மால் இயன்றதைச் செய்தாலே போதும். நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ செய்த இது போன்ற நல்ல செயல்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

அலுவலக உரையாடல் ஒன்றில் தனிமையே மன உளைச்சலுக்கான காரணங்களில் முக்கியமானது என்று பேசிக் கொண்டிருந்தோம். அன்றிரவு வீட்டில், ( தனிமையில் :-) )அதைப் பற்றி யோசித்து கொண்டிருந்த போது தோன்றிய வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதை ஒரு கவிதையாய் மாற்ற முயற்சிக்கிறேன்.

            மௌனத்தின் அலறலை விட
             இரைச்சலின் நிசப்தம்
             பெரும்பாலான நேரங்களில்
              இதமாய் இருக்கிறது
              மனதுக்கு...

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! நமக்கும், சமூகத்திற்குமான நற்செயல்களை நம்மால் இயன்றவரை செய்வோம்.