Sunday, October 24, 2010

காமன்வெல்த் போட்டியும் அயோத்தி தீர்ப்பும்

உலக நாடுகளில் பல, இந்தியா எப்படியும் திணறி தலைகுனிய போகிறது என ஆர்வத்துடன் எதிர்பார்த்த இரு முக்கிய நிகழ்வுகளிலும் இந்தியா & இந்தியர்களின் சிறப்பான செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

முதலில் காமன்வெல்த் போட்டி:

காமன்வெல்த் போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என இந்தியா முயன்றது ஏன்? என்பதே எனக்கு சரியாக விளங்கவில்லை. இதன் மூலம் எதைச் சாதிக்க, எதை உலகுக்கு சொல்ல அல்லது யாருக்கு போட்டியாக நமது திறமையைக் காட்ட நினைத்தோமோ தெரியவில்லை.

ஒரு சர்வதேச போட்டியை சிறப்பாக நடத்தும் திறமையும், திட்டமிட்ட செயல்பாடும் உடையவர்கள் நாங்கள் என உலகுக்கு காட்டுவது தான்
உண்மையிலேயே நமது நோக்கம் என்றால் ஆரம்பகால சொதப்பல்கள் எல்லாமே அதற்கு எதிராகவே அமைந்தன.

விளையாட்டு துறை அமைச்சர் திரு. கில் சர்வசாதாரணமாக 'கடைசி இரு வாரங்களில் எல்லாமே சரி செய்து விடுவோம். கடைசி நிமிடங்களில் எல்லா வேலைகளையும் செய்யும் இந்திய இல்லத் திருமணங்களைப் போலத் தான் இதுவும்' என்று கூறினார். ஓரளவுக்கு இது உண்மையும் கூட.

கடைசி நிமிடத்தில் ஏதாவது செய்து ஒப்பேற்றி விடுவோம் என்பது நமக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (இது கூட தவறு தான்). ஆனால் உலகமே கவனித்துக் கொண்டிருக்கும், பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்வில் இப்படி இருந்தது எந்த விதத்திலும் இந்தியாவிற்கு சிறப்பில்லை.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் பல நாடுகளுக்கு இந்த குளறுபடிகளெல்லாம் பெரும் வசதியாய் அமைந்தன. சில நாட்டு ஊடகங்கள் சீனாவின் ஒலிம்பிக் சிறப்பை ஒப்பீடு செய்து நம்மை விமர்சித்தன. தீவிரவாதத் தாக்குதல்கள், பாதுகாப்பு பிரச்னைகள், தொடர்மழையும் அதன் விளைவான தொற்றுநோய் அபாயமும், அயோத்தி தீர்ப்பும் அதன் விளைவான கலவர பயமும் என சீனாவுக்கு இல்லாத எத்தனையோ 'சனநாயக நாட்டிற்கான' பிரச்னைகளும் இந்தியாவுக்கு இருந்தன. ஆனால், கடைசி இரு வாரங்களில் அனைத்தையும் சரிசெய்து, துவக்க நிகழ்ச்சி முதல் நிறைவு விழா வரை சர்வதேசத் தரத்துடன் நடத்திக் காட்டி எல்லோரையும் வாயடைக்கச் செய்து விட்டோம்.

விமர்சனம் செய்த அளவுக்கு, சிறப்பாக நடத்திக் காட்டிய திறமையைப் பாராட்ட ஏனோ சர்வதேச ஊடகங்களுக்கு மனமில்லை. விளையாட்டு நகரத்தில் பாலம் ஒன்று உடைந்ததை மிகப்பெரிய அளவில் விமர்சித்து பூதாகரமாக்கியவர்களுக்கு, ஐந்தே நாட்களில் நமது ராணுவம் அதை சரிசெய்ததைப் பாராட்டத் தோணவில்லை.

வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இந்த ஊடகங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டு 'நம்ம இந்தியா இப்படித் தான்' என்று இளக்காரமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பின் ஊடகங்களின் நம்பகத்தன்மை, நடுநிலைமை எல்லாமே கேள்விக்குரியவை ஆகிவிட்டன. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

எப்படியோ காமன்வெல்த் போட்டி சிறப்பாக நடந்து முடிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையே. ஊழல் பிரச்னைகளெல்லாம் நம் உள்நாட்டுப் பிரச்னைகள் :-)

அயோத்தி தீர்ப்பு:

காமன்வெல்த் போட்டி நெருங்கும் வேளையில் அயோத்தி தீர்ப்பும் வெளிவர அதனுடைய எதிரொலி எப்படி இருக்குமோ என எல்லோருக்குமே மிகப்பெரிய கவலை இருந்தது. தீர்ப்பு தங்களுக்கு எதிரானது என எண்ணி ஏதாவது ஒரு சாரார் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இந்தியர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் தொடர்வதில் எந்த விருப்பமும் இல்லை என்பதையே தீர்ப்பின் பிந்தைய நாட்கள் உணர்த்தியது.

நீதிமன்றங்களுக்கும் அவைகளின் தீர்ப்புக்கும் இந்தியர்கள் தரும் மரியாதையும் மீண்டும் நிரூபணமாகியது. இதே தீர்வை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ சொல்லி இருந்தால், ஒருவேளை இது அரசியலாக்கப் பட்டிருக்கலாம்.

எப்படியோ சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னைக்கான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இரு தரப்பும் அமைதி காத்தது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!

இருப்பினும் திரு. சுஜாதா தனது கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டி இருந்த திரு. மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது

       பாபருக்கு வேண்டும் மசூதி
       ராமருக்கு வேண்டும் கோயில்
      சனங்களுக்கு வேண்டும் சுகாதாரமான
      கழிப்பறைகளேனும்..

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்றும் பொருந்துவது வருத்தத்திற்குரியது.

Sunday, October 17, 2010

தமிழகத்திற்கு குவியும் பாராட்டுகள்!

''கல்வி, மின்சாரம் போன்றவற்றில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டியவை ஆகும்''

                                                                                    - குடியரசுத் தலைவர்

''அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும், திட்டங்கள் போன்ற பெரும் பணிகளிலும் ஊழல் வெகுவாகக் குறைந்து, திறமை அதிகமாகக் காணப்படும் ஒரே மாநிலம் தமிழகமே!'

                                                                                   - பிரதமர்

''விவசாயிகளுக்கு கடன் வழங்குவதிலும், கூட்டுறவுத் துறை வளர்ச்சியிலும் முன்னணியில் இருப்பது தமிழகமே!'

                                                                                  - மத்திய அமைச்சர்



''முற்போக்கு அரசியலிலும், நிலையான ஆட்சியிலும், நிர்வாகத் திறமையிலும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது'
   
                                                                  - மத்திய உணவு அமைச்சர்


''சிகப்பு நாடா என்ற தாமதத் தன்மை என்னும் தீராத நோயைத் தீர்த்துக் கட்ட முழுமூச்சுடன் முயன்று முன்னேறி வருகிறது தமிழகம். அதை பிற மாநிலங்களும் அவசியம் பின்பற்ற வேண்டும்''

                                                                                - தேசியத் தலைவர்


''உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது. இது என்றுமில்லாத சாதனை.'

                                                                               - மத்திய அமைச்சர்


''சமுதாய நலத்திட்டங்களுக்கான மத்திய அரசின் மானியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான்''
                                                          
                                                                 - மத்திய திட்டக்குழு தலைவர்


என்ன? படிக்க படிக்க ''கண்ண கட்டுதா'' உங்களுக்கு? அவ்வளவு நல்ல ஆட்சியா நடக்குது இங்கே? என்று கேட்க தோணுகிறதா?


இந்தப் பாராட்டுக்களெல்லாம் மக்கள் தலைவர் காமராசர் தமிழக முதல்வராய் இருந்த போது திரு. ராஜேந்திர பிரசாத், பண்டித நேரு, மொரார்ஜி தேசாய், ஏ.எம்.தாமஸ், பண்டித பந்த், எம்.வி.கிருஷ்ணப்பா, குல்சாரிலால் நந்தா போன்ற தலைவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள்.

என்னை மிகவும் கவர்ந்த பெரும் தலைவர் காமராசரைப் பற்றிய பதிவுடன் எனது தளத்தைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயம் சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு சிறப்பான ஆட்சியுடன் துவங்கிய நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை என்னும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.

அண்மையில் காமராசரைப் பற்றிய ஒரு புத்தகத்தை நூலகத்தில் படித்தேன் (மக்கள் தலைவர் காமராசர், தொகுப்பு - சுந்திர புத்தன், வெளியீடு - தோழைமை வெளியீடு) அதில் கிடைத்த தகவல்கள் தான் மேலே சொன்னவை. எனது நெருங்கிய நண்பன் அடிக்கடி கூறுவான் ''காமராசரைப் பற்றியெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு தெரியாமலே போய் விடுமோ?'' தலைவரைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரியப்படுத்தும் முயற்சியை நான் தொடர்ந்து செய்வேன்.

பெரியாரும், காமராசரும் கனவில் வருகிறார்கள், காமராசரின் ஆட்சி தான் இங்கே நடக்கிறது, காமராசரின் ஆட்சி சிறந்த ஆட்சி என்றெல்லாம் இன்று கூறிக் கொள்ளும் திரு. கருணாநிதி, தானும் தன்னுடைய கட்சியும் காமராசருக்கு எதிராக அன்று செய்த அநாகரீகமான அவதூறு விமர்சனங்களுக்கெல்லாம் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? தமிழக அரசியலின் மூத்த தலைவரிடம் இருந்து இந்த குறைந்தபட்ச அரசியல் நாகரீகத்தை, நேர்மையை எதிர்பார்க்கலாமா?