முதலில் காமன்வெல்த் போட்டி:
காமன்வெல்த் போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என இந்தியா முயன்றது ஏன்? என்பதே எனக்கு சரியாக விளங்கவில்லை. இதன் மூலம் எதைச் சாதிக்க, எதை உலகுக்கு சொல்ல அல்லது யாருக்கு போட்டியாக நமது திறமையைக் காட்ட நினைத்தோமோ தெரியவில்லை.
ஒரு சர்வதேச போட்டியை சிறப்பாக நடத்தும் திறமையும், திட்டமிட்ட செயல்பாடும் உடையவர்கள் நாங்கள் என உலகுக்கு காட்டுவது தான்
உண்மையிலேயே நமது நோக்கம் என்றால் ஆரம்பகால சொதப்பல்கள் எல்லாமே அதற்கு எதிராகவே அமைந்தன.
விளையாட்டு துறை அமைச்சர் திரு. கில் சர்வசாதாரணமாக 'கடைசி இரு வாரங்களில் எல்லாமே சரி செய்து விடுவோம். கடைசி நிமிடங்களில் எல்லா வேலைகளையும் செய்யும் இந்திய இல்லத் திருமணங்களைப் போலத் தான் இதுவும்' என்று கூறினார். ஓரளவுக்கு இது உண்மையும் கூட.
கடைசி நிமிடத்தில் ஏதாவது செய்து ஒப்பேற்றி விடுவோம் என்பது நமக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (இது கூட தவறு தான்). ஆனால் உலகமே கவனித்துக் கொண்டிருக்கும், பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்வில் இப்படி இருந்தது எந்த விதத்திலும் இந்தியாவிற்கு சிறப்பில்லை.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் பல நாடுகளுக்கு இந்த குளறுபடிகளெல்லாம் பெரும் வசதியாய் அமைந்தன. சில நாட்டு ஊடகங்கள் சீனாவின் ஒலிம்பிக் சிறப்பை ஒப்பீடு செய்து நம்மை விமர்சித்தன. தீவிரவாதத் தாக்குதல்கள், பாதுகாப்பு பிரச்னைகள், தொடர்மழையும் அதன் விளைவான தொற்றுநோய் அபாயமும், அயோத்தி தீர்ப்பும் அதன் விளைவான கலவர பயமும் என சீனாவுக்கு இல்லாத எத்தனையோ 'சனநாயக நாட்டிற்கான' பிரச்னைகளும் இந்தியாவுக்கு இருந்தன. ஆனால், கடைசி இரு வாரங்களில் அனைத்தையும் சரிசெய்து, துவக்க நிகழ்ச்சி முதல் நிறைவு விழா வரை சர்வதேசத் தரத்துடன் நடத்திக் காட்டி எல்லோரையும் வாயடைக்கச் செய்து விட்டோம்.
விமர்சனம் செய்த அளவுக்கு, சிறப்பாக நடத்திக் காட்டிய திறமையைப் பாராட்ட ஏனோ சர்வதேச ஊடகங்களுக்கு மனமில்லை. விளையாட்டு நகரத்தில் பாலம் ஒன்று உடைந்ததை மிகப்பெரிய அளவில் விமர்சித்து பூதாகரமாக்கியவர்களுக்கு, ஐந்தே நாட்களில் நமது ராணுவம் அதை சரிசெய்ததைப் பாராட்டத் தோணவில்லை.
வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இந்த ஊடகங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டு 'நம்ம இந்தியா இப்படித் தான்' என்று இளக்காரமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பின் ஊடகங்களின் நம்பகத்தன்மை, நடுநிலைமை எல்லாமே கேள்விக்குரியவை ஆகிவிட்டன. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
எப்படியோ காமன்வெல்த் போட்டி சிறப்பாக நடந்து முடிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையே. ஊழல் பிரச்னைகளெல்லாம் நம் உள்நாட்டுப் பிரச்னைகள் :-)
அயோத்தி தீர்ப்பு:
காமன்வெல்த் போட்டி நெருங்கும் வேளையில் அயோத்தி தீர்ப்பும் வெளிவர அதனுடைய எதிரொலி எப்படி இருக்குமோ என எல்லோருக்குமே மிகப்பெரிய கவலை இருந்தது. தீர்ப்பு தங்களுக்கு எதிரானது என எண்ணி ஏதாவது ஒரு சாரார் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இந்தியர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் தொடர்வதில் எந்த விருப்பமும் இல்லை என்பதையே தீர்ப்பின் பிந்தைய நாட்கள் உணர்த்தியது.
நீதிமன்றங்களுக்கும் அவைகளின் தீர்ப்புக்கும் இந்தியர்கள் தரும் மரியாதையும் மீண்டும் நிரூபணமாகியது. இதே தீர்வை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ சொல்லி இருந்தால், ஒருவேளை இது அரசியலாக்கப் பட்டிருக்கலாம்.
எப்படியோ சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னைக்கான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இரு தரப்பும் அமைதி காத்தது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!
இருப்பினும் திரு. சுஜாதா தனது கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டி இருந்த திரு. மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது
பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோயில்
சனங்களுக்கு வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகளேனும்..
ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்றும் பொருந்துவது வருத்தத்திற்குரியது.