Monday, August 15, 2011

என்னமோ போங்க...

புத்தாண்டுக்குப் பின் எட்டரை மாதம் கழித்து சுதந்திர தினத்தன்று ஒரு பதிவேற்றம் செய்வதற்கு சோம்பேறித்தனத்தை விட வேறென்ன காரணம் இருக்க முடியும்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்...!

சீசனுக்கு வந்து போக நீங்க என்ன வேடந்தாங்கல் பறவையா என கவுண்டமணி நாட்டாமையில் கேட்பது போல புத்தாண்டுக்கும், சுதந்திர தினத்துக்கும் வாழ்த்து சொல்ல நம்ம என்ன மன்மோகன் சிங்கா?

எட்டரை மாதத்தில் என்ன என்னவோ நடந்து விட்டது... சில அரசியல் புள்ளிகள் உள்ளே, சில மந்திரிகள் வெளியே, சில ஆட்சியே மாறிப் போச்சு... இருந்தாலும் இந்தியா வளரும், நல்ல நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

கனிமொழியின் கைது பற்றி தெரிந்ததும் என் நண்பன் செந்தில் அனுப்பிய குறும்பா, குறும்பாகவும் இருந்தது, நன்றாகவும் இருந்தது

             ஊழலில் விழுந்த
             முதல் விதை ஈன்ற
              கடைசிக் கனி
              இன்று சிறையில்..
              தெய்வம் நின்றாலும்
               கொல்லும்.....

'நின்றாவது' என்பதை 'நின்றாலும்' என மாற்றினேன் அவன் அனுமதியுடன்...

எத்தனையோ கசப்பான செய்திகள் இருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் சில நல்லவர்களை எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தாண்டுப் பதிவில் என் நண்பரைப் பற்றிக் கூறி இருந்தேன். அவரின் தந்தை செய்து கொண்டிருக்கும் நற்செயல் அதைவிட நெகிழ வைத்தது.. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு அவர்களின் வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் ஒருவர் அப்போது மாரடைப்பால் இறந்து விட்டார். அவரின் மகளை இன்று வரை நண்பரின் தந்தை தான் படிக்க வைக்கிறார். அந்தப் பெண் இப்போது +2 படிக்கிறார்.

என்னுடன் கோவையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். தாய்நாட்டின் மீதான அக்கறையாலும், நம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்தியாவிற்கே திரும்பி வந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளார். இது அண்மையில் தான் எனக்கு தெரிய வந்தது. பெருமிதமாக இருந்தது.

ஜெய்ஹிந்த்....!


1 comment:

  1. Good poem by senthil. நின்றாலும் என்பதை விட என்றானலும் will be a good one.

    ReplyDelete