கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் இந்திய அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்: "தி.மு.க சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் இப்போது நிலத் தரகர் வேலை தான்.. கருணாநிதி குடும்பத்தாருக்கு நிலம் வாங்கிக் கொடுப்பது தான் முக்கிய வேலையே." அரசியல் தொடர்புடைய பலருடனும் நண்பருக்கு தொடர்பு உண்டு. அவர் கூறிய இன்னொரு செய்தி என்னை மயக்கமடையச் செய்தது: "அரசுப் பயணமாக இங்கு வந்த தமிழக அமைச்சர் ஒருவர் அண்டை நாட்டில் 600 ஏக்கர் நிலத்தை வாரிசு ஒருவருக்காக வாங்கிச் சென்றுள்ளார்". ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்த்தால் இதெல்லாம் ஒரு செய்தியே இல்லை என்பது போலத் தோன்றும்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான இடங்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என இந்தக் குடும்பம் ஆக்டோபஸ் போல வளைத்து விட்டது. 14 தொலைக்காட்சி அலைவரிசைகள், திரைப்படத் துறையில் முழு ஆக்கிரமிப்பு, கணக்கிட முடியாத பண பலம் எனத் தமிழகத்தில் ஏறத்தாள ஏகாதிபத்தியத்தை (monopoly) நிறுவி விட்டார்கள். "நல்லது எதுவும் நடக்காவிடினும் பரவாயில்லை, அடுத்த முறை ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்து, தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும்" என்ற மனநிலை தமிழகத்தில் நிறையப் பேருக்கு வந்து விட்டது.
திரு. ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' என்ற புதினத்தை (நாவல்) கடந்த வாரம் படித்தேன். ஜெயகாந்தனின் 1, 2 சிறுகதைகளை மட்டுமே, அதுவும் பல வருடங்களுக்கு முன்பு, படித்திருந்த எனக்கு இந்த புதினம் பெரிய 'வாசிப்பு அனுபவமாக' இருந்தது. எந்த திருப்பங்களும் இல்லாத, கற்பனைக்கெட்டாத விசயங்களெல்லாம் இல்லாத, ஒரு மனிதனுக்கும், அவனைச் சுற்றி உள்ளவர்களுக்குமான 2 மாத நிகழ்வுகளின் தொகுப்பாக இவ்வளவு சுவையாக எழுதி இருக்கிறார். ஒவ்வொரு இடத்தையும், கதாபாத்திரங்களின் குணாதிசியங்களையும், பல்வேறு சூழ்நிலைகளில் இந்தக் குணாதிசியங்கள் அனிச்சைச் செயலாய் எங்கனம் வெளிப்படுகிறது என்பதையும் அவர் விளக்கி எழுதி இருப்பது ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது.
கதாநாயகன் மிக்க நல்லவனாக, எல்லோரையும் மதிப்பவனாக, நெகிழ்ச்சியான அணுகுமுறை உள்ளவனாக இருப்பதற்கு 'முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத. சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, புகார்கள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புக்கள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே தழைத்த' குடும்பத்தில் சுதந்திரமாக வளர்ந்ததே காரணம் என்கிறார். நுகர்வுக் கலாச்சாரத்துக்கு முந்தைய (என் வயதை ஒத்தவர்களின் பள்ளிப் பருவத்தில்), ஓரளவு நிரந்தர வருமானம் உடைய, நல்ல பெற்றோர்கள் அமைந்த, நடுத்தரக் குடும்பங்களில் வளர்ந்தவர்களில் நிறைய பேருக்கு இதில் பாதி அனுபவமேனும் கிடைத்திருக்கும்.
கதையின் இன்னொரு நாயகனை இவன் வாழ்த்துவதற்கு சொல்லும் காரணம் என்னைக் கவர்ந்தது 'வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்துகொள்கிறவர்கள் தான் ரொம்பக் குறைவு. அந்தக் குறைவானவர்களில் நீங்களும் ஒருவர்...'
இது போல பல இடங்களில் மிக எளிமையாக, சாதாரணமாக தன் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லாத நாயகன், நண்பனுக்காக குடிக்க சம்மதிக்கிறான். நண்பன் உடனே 'எனக்காக உங்கள் கொள்கையைத் தளர்த்திக் கொள்ள வேண்டாம்' என்கிறான். அதற்கு 'எனது கொள்கையே ஃபிளெக்சிபிளாக இருப்பது தான்' என்று பதிலளிக்கிறான். எவ்வளவு நல்ல செய்தி இது. இதை நாம் ஓரளவு (குடிப்பதை சொல்லவில்லை :-) ) கடைப்பிடித்தாலே போதும் - வீடோ, அலுவலகமோ எல்லா இடங்களிலும் கர்வமில்லாத சுமூகமான சூழல் நிலவும்.
வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் இந்தப் புதினத்தைப் படியுங்கள். சிங்கப்பூரில் நூலகங்களில் இது கிடைக்கும்.
சரி... தி.மு.க. வுக்கும் (திரு. மு. க.), ஜெயகாந்தனுக்கும் என்ன தொடர்பு? புதினத்தின் தலைப்பு: 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்'. கருணாநிதி அவர்களின் குடும்பச் சொத்துக்களைப் பார்க்கும் போது 'ஒரு மனிதன், ஒரு குடும்பம், தமிழ் நாடு' என்பது பொருத்தமாகிறது. :-)
No comments:
Post a Comment